மார்ச், 2019 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மார்ச் 2019

மிகப்பெரிய பரிசு

பல ஆண்டுகளாக என்னுடைய சிநேகிதி பார்பரா எனக்கு அதிக எண்ணிக்கையில், என்னை ஊக்கப்படுத்தும் அட்டைகளையும், சிந்திக்க வைக்கும் பரிசுகளையும் கொடுத்துவந்தாள். நான் அவளிடம் இயேசு கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று சொன்னபோது, இதுவரை கொடுத்ததையெல்லாம் விட மிகப் பெரிய பரிசாக என்னுடைய முதல் வேதபுத்தகத்தைக் கொடுத்தாள். 'நீ தேவனோடு நெருக்கமாக வளர்ந்து, ஆவியில் முதிர்ச்சியடைந்து, அவரை அனுதினமும் சந்தித்து, வேதம் வாசித்து, ஜெபித்து, அவர் மீது நம்பிக்கையோடு, அவருக்குக் கீழ்படிந்திரு" என்றார். பார்பரா தேவனைப் பற்றி இன்னும் நன்கு அறிந்துகொள்ள என்னை அழைத்துச் சென்றபோது, என்னுடைய வாழ்வு முற்றிலும் மாறியது.

அப்போஸ்தலனாகிய பிலிப்புவைப் பற்றி பார்பரா எனக்கு நினைப்பூட்டினாள். இயேசு, பிலிப்புவிடம் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தபோது (யோவா. 1:43), அந்த அப்போஸ்தலன் உடனடியாகத் தன்னுடைய நண்பன் நாத்தான்வேலிடம், 'நியாயப்பிரமாணத்திலே மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம் (வச. 45) என்றான். நாத்தான்வேல் சந்தேகித்த போது, பிலிப்பு வாக்குவாதமோ, விமர்சனமோ பண்ணவுமில்லை, அவனை விட்டுவிடவுமில்லை. ஆனால், நேருக்கு நேர் சந்திக்கும் படி இயேசுவிடம் அழைத்து வந்தான். 'வந்து பார்" என்றான் (வச. 46).

நாத்தான்வேல் இயேசுவை, 'தேவனுடைய குமாரன்", 'இஸ்ரவேலின் ராஜா" (வச. 49) என்று வெளிப்படுத்தினதைக் கேட்ட பிலிப்பு எப்படி மகிழ்ந்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. தன்னுடைய நண்பன் 'மிகப்பெரியவற்றை" காணத் தவறவில்லை என்பது எத்தனை ஆசீர்வாதமாயிருக்கிறது. இயேசு அவனிடம், 'இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்" (வச. 50) என்றார்.

தேவனோடு நமக்குள்ள நெருங்கிய உறவை பரிசுத்த ஆவியானவர் துவக்கி வைக்கின்றார். அவரை விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்பவர்களின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகின்றார். இயேசுவை நன்கு அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உதவுகின்றார். இயேசுவைச் சந்திக்க நாம் பிறரை அழைத்துவரும்படி பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் மூலம் கிரியை செய்கின்றார். இயேசுவை மேலும் அறிந்துகொள்ள அழைப்பதே, நாம் பெற்றுக்கொள்ளவும், கொடுக்கவும் ஏற்ற மிகச்சிறந்த பரிசு.

படைப்பவரும் காப்பவரும்

பெரிதாக்கிக் காட்டும் ஒரு லென்ஸையும், நுண்ணிய ஓர் இடுக்கியையும் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும், சுவிஸ் கடிகாரம் செய்யும் பிலிப், அதிக கவனத்தோடு அந்த கடிகாரத்தின் பாகங்களை எப்படி பிரிப்பது, சுத்தப்படுத்துவது, மீண்டும் அந்த இயந்திரத்தின் நுண்ணிய பாகங்களை எப்படி பொருத்துவது என எனக்கு விளக்கிக் காண்பித்தார். அதிலுள்ள மிக நுணுக்கமான பகுதிகளுக்குள்ளே, கடிகாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான, ஒரு சிறிய சுருள்வில்லைக் (ஸ்பிரிங்) காண்பித்தார். அந்த முக்கிய சுருள்வில்தான் அங்குள்ள கியர் அமைப்பினை இயங்கச்செய்து சரியான நேரத்தைக் காட்ட உதவுகின்றது. எத்தனை சிறப்புமிக்க கடிகாரமாயிருந்தாலும் இந்த முக்கிய ஸ்பிரிங் இல்லாமல் இயங்க முடியாது என்றார்.

புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள எபிரெயர் புத்தகத்தில் அதனை எழுதியவர் இயேசுவின் மூலமாக தேவன் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார் என்பதால், இயேசுவை மனதாரப் போற்றுகின்றார்.

ஒரு சிறப்புமிக்க கடிகாரத்தின் நுணுக்கங்களைப் போன்று, இந்த உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் இயேசுவால் படைக்கப்பட்டது (எபி. 1:2). சூரிய மண்டலம் முதல் நம்முடைய விரல் ரேகையில் தனித்துவம் வரை எல்லாம் அவராலேயே படைக்கப்பட்டது.

ஒரு கடிகாரத்தின் இயக்கத்திற்கு நுண்ணிய முதன்மை சுருள்வில் எப்படி முக்கியமானதோ அப்படியே எல்லாப் படைப்புகளும் இயங்கவும், செழித்தோங்கவும் காரணமான இயேசு படைப்பாளியையும் விட மேலாகத் திகழ்கின்றார். அவருடைய பிரசன்னம், 'தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்கிறவராய்" (வச. 3) காணப்படுகின்றார். மேலும் அவருடைய படைப்புகள் அனைத்தையும் அவற்றின் வியத்தகு இணைப்புகளோடு இணைந்து இயங்கச் செய்யவும் வல்லமையுள்ளதுமாயிருக்கிறது.

படைப்புகளின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு உனக்கிருப்பதால், 'எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது" (கொலோ. 1:17) என்பதையும் நினைவில் கொள். இயேசுவே எல்லா படைப்புகளுக்கும், அவற்றின் பராமரிப்புக்கும் காரணர் என்பதை உணரும்போது நம் உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியோடு நாம் அவரைப் போற்றி புகழ்வோம். அவருடைய படைப்புகளின் தேவைகளையெல்லாம் அவரே தருகின்றார் என்பதையும் நினைத்துப் போற்றுவோம்.

பிரகாசமான விளக்குகள்

2015 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், கென்யாவிலுள்ள நைரோபி என்ற இடத்திலுள்ள மாதரே என்ற பின்தங்கிய பகுதிக்குச் சென்ற எங்கள் ஆலயத்தின் குழுவினர், அங்கு கண்ட காட்சியால் அதிர்ந்து போயினர். அங்கு நாங்கள் அழுக்கடைந்த

பள்ளிக்கூடத்தையும், துருபிடித்த உலோகச் சுவர்களையும் நலிவடைந்த மரச்சாமான்களையும் கண்டோம். மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள அம்மக்களினிடையே ஒரே ஒரு நபர் மட்டும் மாறுபட்டு காணப்பட்டாள்.

அவளுடைய பெயர் பிரிலியன்ட். அந்த பெயர் அவளுக்குச் சற்றும் பொருத்தமாயில்லை. அவள் அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவளுக்குள் மகிழ்ச்சியும் தன்னுடைய சேவையைக் குறித்த ஒரு தீர்மானமும் இருந்தது. அவள் வண்ணமிகு உடையணிந்திருந்தாள். அவளுடைய தோற்றமும், அவள் மகிழ்ச்சியோடு அக்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த விதமும் எங்களை வியப்படையச் செய்தது.

முதலாம் நூற்றாண்டில் பிலிப்பி பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இவ்வுலகில் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென பவுல் அவர்களுக்கு எழுதியதைப் போன்று பிரிலியன்ட் -ம் தன்னைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு ஒரு பிரகாசமான ஒளியைக் கொடுத்தாள். ஆவியில் பரிசுத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த உலகில், இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் வானத்தின் சுடர்களைப் போலப் பிரகாசிக்க வேண்டுமென பவுல் கூறுகின்றார் (பிலி. 2:15). நாம் செய்யவேண்டிய செயல் திட்டம் ஒன்றும் மாறிவிடவில்லை. பிரகாசமான விளக்குகள் எங்கும் தேவையாயிருக்கின்றது. 'தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வச. 13) என்பதைக் கேட்கும் போது எத்தனை ஆர்வமாயிருக்கிறது. இயேசு தன்னைப் பின்பற்றுபவர்கள், எப்படியிருக்கவேண்டுமென விரும்புகின்றாரோ அப்படியே அவருடைய விசுவாசிகள் பிரகாசிக்க வேண்டும். இன்னும் அவர் நமக்குச் சொல்வது, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்... மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத். 5:14-16) என்பதே.

தேவனால் சூழப்பட்டிருக்கிறோம்

கூட்டம் நிறைந்துள்ள ஒரு விமான நிலையத்தில், ஓர் இளம் தாய் தனிமையாகப் போராடிக் கொண்டிருந்தார். அவளுடைய சிறிய குழந்தை கோபத்தில் இருந்தது. அது கத்திக் கொண்டும், உதைத்துக் கொண்டும், விமானத்திற்குள் ஏற மறுத்தும், முரட்டாட்டம் பண்ணிக் கொண்டிருந்தது. தன்னால் தாங்க முடியாமல் தவித்த அந்த கர்ப்பிணியானத் தாய், கடைசியாக கைவிட்டாள். வெறுப்படைந்தவளாய் தரையில் உட்கார்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள்.

உடனடியாக ஆறு அல்லது ஏழு முன்னறிமுகமில்லாத பெண் பிரயாணிகள் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் சூழ்ந்துகொண்டனர். தின்பண்டங்களைக் கொடுத்தனர், தண்ணீர் கொடுத்தனர், அன்போடு அணைத்துக் கொண்டனர், ஒரு குழந்தைக்கான பாடலையும் பாடினர். அவர்களின் அன்பும் அரவணைப்பும் அந்தக் குழந்தை அமைதியாக அமர்ந்தது. அனைத்துப் பெண்களும் தங்கள் இருக்கைக்குத் திரும்பினர். அவர்கள் தாங்கள் என்ன செய்தோமென விவாதிக்கவில்லை. ஆனால், தங்களின் உதவி சரியான நேரத்தில் அந்த இளம்தாயை பெலப்படுத்தியது என்று தெரிந்துகொண்டனர்.

இந்தக் காட்சி சங்கீதம் 125ல் காட்டப்பட்டுள்ள அழகிய உண்மையை விளக்கிக் காட்டுகின்றது. வசனம் 2ல் 'கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்" இது சுறுசுறுப்பான எருசலேம் நகரம் எவ்வாறிருக்கும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றது. எருசலேம், ஒலிவமலை, சீயோன் மலை, மோரியா மலை என அநேக மலைகளால் சூழப்பட்ட ஒரு நகரம்.

இதே போன்று தேவன் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களின் ஆத்துமாவைப் பாதுகாக்கின்றார். 'இது முதல் என்றென்றைக்கும் பாதுகாக்கின்றார். கடினமான நாட்களிலும் 'எனக்கொத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1) என்று சங்கீதக்காரன் கூறுவது போல தேவனை நோக்கிப் பார். தேவன் உறுதியான உதவிகளோடு காத்திருக்கின்றார். நிலையான நம்பிக்கையைத் தருகின்றார். அவர் மாறாத அன்புடையவர்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஓய்வெடுக்க அனுமதி

சில கடற்கரை பாறைகளின் மேல் அமர்ந்தோம், நானும் என் நண்பன் சூசியும், பொங்கும் நுரைகளின் வழியே, கடல் நீர் சுருளையாகப் பொங்குவதைப் பார்த்தோம். பாறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மோதும் அலைகளைப் பார்த்து சூசி, “எனக்குக் கடல் பிடிக்கும். அது ஓடிக்கொண்டே இருப்பதால், நான் நின்று பார்க்கலாம்" என்றார்.

நம் வேலையை இடைநிறுத்தி ஓய்வெடுக்க "அனுமதி" தேவை என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது அல்லவா? சரி, அதைத்தான் நம் நல்ல தேவன் நமக்கு வழங்குகிறார்! ஆறு நாட்களுக்குத் தேவன், சுழலும் பூமி, ஒளி, நிலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை உருவாக்கினார். ஏழாவது நாளில், தேவன் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:31-2:2). பத்து கட்டளைகளில், அவரை கனப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விதிகளைத் தேவன் பட்டியலிட்டார் (யாத்திராகமம் 20:3-17), ஓய்வுநாளை ஓய்வுநாளாக நினைவுகூர வேண்டும் (வவ. 8-11) என்பது அதிலொன்று. புதிய ஏற்பாட்டில், இயேசு ஊரில் உள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 1:29-34). பின்னர் மறுநாள் அதிகாலையில் ஜெபிக்க ஒரு தனியான இடத்திற்குச் செல்கிறார் (வச. 35). நம் தேவன் நோக்கத்துடன் வேலை செய்தார் மற்றும் ஓய்வெடுத்தார்.

வேலையில் தேவனுடைய உதவி, ஓய்விற்கான அவரது அழைப்பு என இரண்டுமே நம்மைச் சுற்றி ரீங்காரமாக இசைக்கிறது. வசந்த காலத்தில் நட்டால், கோடையில் வளர்ச்சியும், இலையுதிர்காலத்தில் அறுவடையும், குளிர்காலத்தில் ஓய்வும் உண்டாகும். காலை, நன்பகல், மதியம், மாலை, இரவு. தேவன் நம் வாழ்க்கையில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையுமே ஏற்படுத்தியுள்ளார்,  இரண்டையும் செய்ய அனுமதியும் வழங்குகிறார்.

ஆவிக்குரிய புதுப்பிப்பு

சீன மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்து துகள்களைச் சருமத்தில் தேய்ப்பது நடைமுறையில் உள்ளது, தோலின் மேற்புறத்தில் தங்கியிருக்கும் இறந்த திசுக்களை தேய்த்தெடுக்க தரையின் முத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ருமேனியாவில், புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சைக்கு சேற்றைப் பிரபலமாகப் பயன்படுத்துகிறார்கள். சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் வகையில் பரவலாகச் சேறை தேய்த்துக்கொள்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் பராமரிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றனர், இது மிகவும் மந்தமான சருமத்தையும் புதுப்பிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

எவ்வாறாயினும், நமது உடல்களைப் பராமரிக்க நாம் உருவாக்கிய கருவிகள் நமக்குத் தற்காலிக திருப்தியை மட்டுமே தர முடியும். முக்கியமானது என்னவென்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமாகவும் வலிமையோடும் இருப்பதே. இயேசுவை விசுவாசிக்கும் நாம், அவர் மூலமாக ஆவிக்குரிய புத்துணர்வாகிய ஈவையும் பெற்றுள்ளோம். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், "எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரிந்தியர் 4:16). பயம், காயம் மற்றும் பதட்டம் போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். நாம் "காணப்படுகிறவை அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." (வச. 18) என்று நோக்கும்போது ஆவிக்குரிய புத்துணர்வு வருகிறது. நமது அன்றாட கவலைகளை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு, பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22-23 நம் வாழ்வில் புதிதாக வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்பதின் மூலமாக இதை அடைகிறோம். நாம் நமது பிரச்சனைகளைத் தேவனிடம் விட்டுவிட்டு, அவருடைய ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம் மூலம் பிரகாசிக்க அனுமதிக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களை மறுசீரமைக்கிறார்.

திருப்தியை பற்றிக்கொள்ளுதல்

ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, "உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே" என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: "ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். அதாவது "நான் திருப்தியாக இருக்கிறேன்" (வச. 2).

இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் "உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்" மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.