மார்ச், 2019 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மார்ச் 2019

மிகப்பெரிய பரிசு

பல ஆண்டுகளாக என்னுடைய சிநேகிதி பார்பரா எனக்கு அதிக எண்ணிக்கையில், என்னை ஊக்கப்படுத்தும் அட்டைகளையும், சிந்திக்க வைக்கும் பரிசுகளையும் கொடுத்துவந்தாள். நான் அவளிடம் இயேசு கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று சொன்னபோது, இதுவரை கொடுத்ததையெல்லாம் விட மிகப் பெரிய பரிசாக என்னுடைய முதல் வேதபுத்தகத்தைக் கொடுத்தாள். 'நீ தேவனோடு நெருக்கமாக வளர்ந்து, ஆவியில் முதிர்ச்சியடைந்து, அவரை அனுதினமும் சந்தித்து, வேதம் வாசித்து, ஜெபித்து, அவர் மீது நம்பிக்கையோடு, அவருக்குக் கீழ்படிந்திரு" என்றார். பார்பரா தேவனைப் பற்றி இன்னும் நன்கு அறிந்துகொள்ள என்னை அழைத்துச் சென்றபோது, என்னுடைய வாழ்வு முற்றிலும் மாறியது.

அப்போஸ்தலனாகிய பிலிப்புவைப் பற்றி பார்பரா எனக்கு நினைப்பூட்டினாள். இயேசு, பிலிப்புவிடம் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தபோது (யோவா. 1:43), அந்த அப்போஸ்தலன் உடனடியாகத் தன்னுடைய நண்பன் நாத்தான்வேலிடம், 'நியாயப்பிரமாணத்திலே மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம் (வச. 45) என்றான். நாத்தான்வேல் சந்தேகித்த போது, பிலிப்பு வாக்குவாதமோ, விமர்சனமோ பண்ணவுமில்லை, அவனை விட்டுவிடவுமில்லை. ஆனால், நேருக்கு நேர் சந்திக்கும் படி இயேசுவிடம் அழைத்து வந்தான். 'வந்து பார்" என்றான் (வச. 46).

நாத்தான்வேல் இயேசுவை, 'தேவனுடைய குமாரன்", 'இஸ்ரவேலின் ராஜா" (வச. 49) என்று வெளிப்படுத்தினதைக் கேட்ட பிலிப்பு எப்படி மகிழ்ந்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. தன்னுடைய நண்பன் 'மிகப்பெரியவற்றை" காணத் தவறவில்லை என்பது எத்தனை ஆசீர்வாதமாயிருக்கிறது. இயேசு அவனிடம், 'இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்" (வச. 50) என்றார்.

தேவனோடு நமக்குள்ள நெருங்கிய உறவை பரிசுத்த ஆவியானவர் துவக்கி வைக்கின்றார். அவரை விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்பவர்களின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகின்றார். இயேசுவை நன்கு அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உதவுகின்றார். இயேசுவைச் சந்திக்க நாம் பிறரை அழைத்துவரும்படி பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் மூலம் கிரியை செய்கின்றார். இயேசுவை மேலும் அறிந்துகொள்ள அழைப்பதே, நாம் பெற்றுக்கொள்ளவும், கொடுக்கவும் ஏற்ற மிகச்சிறந்த பரிசு.

படைப்பவரும் காப்பவரும்

பெரிதாக்கிக் காட்டும் ஒரு லென்ஸையும், நுண்ணிய ஓர் இடுக்கியையும் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும், சுவிஸ் கடிகாரம் செய்யும் பிலிப், அதிக கவனத்தோடு அந்த கடிகாரத்தின் பாகங்களை எப்படி பிரிப்பது, சுத்தப்படுத்துவது, மீண்டும் அந்த இயந்திரத்தின் நுண்ணிய பாகங்களை எப்படி பொருத்துவது என எனக்கு விளக்கிக் காண்பித்தார். அதிலுள்ள மிக நுணுக்கமான பகுதிகளுக்குள்ளே, கடிகாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான, ஒரு சிறிய சுருள்வில்லைக் (ஸ்பிரிங்) காண்பித்தார். அந்த முக்கிய சுருள்வில்தான் அங்குள்ள கியர் அமைப்பினை இயங்கச்செய்து சரியான நேரத்தைக் காட்ட உதவுகின்றது. எத்தனை சிறப்புமிக்க கடிகாரமாயிருந்தாலும் இந்த முக்கிய ஸ்பிரிங் இல்லாமல் இயங்க முடியாது என்றார்.

புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள எபிரெயர் புத்தகத்தில் அதனை எழுதியவர் இயேசுவின் மூலமாக தேவன் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார் என்பதால், இயேசுவை மனதாரப் போற்றுகின்றார்.

ஒரு சிறப்புமிக்க கடிகாரத்தின் நுணுக்கங்களைப் போன்று, இந்த உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் இயேசுவால் படைக்கப்பட்டது (எபி. 1:2). சூரிய மண்டலம் முதல் நம்முடைய விரல் ரேகையில் தனித்துவம் வரை எல்லாம் அவராலேயே படைக்கப்பட்டது.

ஒரு கடிகாரத்தின் இயக்கத்திற்கு நுண்ணிய முதன்மை சுருள்வில் எப்படி முக்கியமானதோ அப்படியே எல்லாப் படைப்புகளும் இயங்கவும், செழித்தோங்கவும் காரணமான இயேசு படைப்பாளியையும் விட மேலாகத் திகழ்கின்றார். அவருடைய பிரசன்னம், 'தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்கிறவராய்" (வச. 3) காணப்படுகின்றார். மேலும் அவருடைய படைப்புகள் அனைத்தையும் அவற்றின் வியத்தகு இணைப்புகளோடு இணைந்து இயங்கச் செய்யவும் வல்லமையுள்ளதுமாயிருக்கிறது.

படைப்புகளின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு உனக்கிருப்பதால், 'எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது" (கொலோ. 1:17) என்பதையும் நினைவில் கொள். இயேசுவே எல்லா படைப்புகளுக்கும், அவற்றின் பராமரிப்புக்கும் காரணர் என்பதை உணரும்போது நம் உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியோடு நாம் அவரைப் போற்றி புகழ்வோம். அவருடைய படைப்புகளின் தேவைகளையெல்லாம் அவரே தருகின்றார் என்பதையும் நினைத்துப் போற்றுவோம்.

பிரகாசமான விளக்குகள்

2015 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், கென்யாவிலுள்ள நைரோபி என்ற இடத்திலுள்ள மாதரே என்ற பின்தங்கிய பகுதிக்குச் சென்ற எங்கள் ஆலயத்தின் குழுவினர், அங்கு கண்ட காட்சியால் அதிர்ந்து போயினர். அங்கு நாங்கள் அழுக்கடைந்த

பள்ளிக்கூடத்தையும், துருபிடித்த உலோகச் சுவர்களையும் நலிவடைந்த மரச்சாமான்களையும் கண்டோம். மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள அம்மக்களினிடையே ஒரே ஒரு நபர் மட்டும் மாறுபட்டு காணப்பட்டாள்.

அவளுடைய பெயர் பிரிலியன்ட். அந்த பெயர் அவளுக்குச் சற்றும் பொருத்தமாயில்லை. அவள் அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவளுக்குள் மகிழ்ச்சியும் தன்னுடைய சேவையைக் குறித்த ஒரு தீர்மானமும் இருந்தது. அவள் வண்ணமிகு உடையணிந்திருந்தாள். அவளுடைய தோற்றமும், அவள் மகிழ்ச்சியோடு அக்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த விதமும் எங்களை வியப்படையச் செய்தது.

முதலாம் நூற்றாண்டில் பிலிப்பி பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இவ்வுலகில் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென பவுல் அவர்களுக்கு எழுதியதைப் போன்று பிரிலியன்ட் -ம் தன்னைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு ஒரு பிரகாசமான ஒளியைக் கொடுத்தாள். ஆவியில் பரிசுத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த உலகில், இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் வானத்தின் சுடர்களைப் போலப் பிரகாசிக்க வேண்டுமென பவுல் கூறுகின்றார் (பிலி. 2:15). நாம் செய்யவேண்டிய செயல் திட்டம் ஒன்றும் மாறிவிடவில்லை. பிரகாசமான விளக்குகள் எங்கும் தேவையாயிருக்கின்றது. 'தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வச. 13) என்பதைக் கேட்கும் போது எத்தனை ஆர்வமாயிருக்கிறது. இயேசு தன்னைப் பின்பற்றுபவர்கள், எப்படியிருக்கவேண்டுமென விரும்புகின்றாரோ அப்படியே அவருடைய விசுவாசிகள் பிரகாசிக்க வேண்டும். இன்னும் அவர் நமக்குச் சொல்வது, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்... மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத். 5:14-16) என்பதே.

தேவனால் சூழப்பட்டிருக்கிறோம்

கூட்டம் நிறைந்துள்ள ஒரு விமான நிலையத்தில், ஓர் இளம் தாய் தனிமையாகப் போராடிக் கொண்டிருந்தார். அவளுடைய சிறிய குழந்தை கோபத்தில் இருந்தது. அது கத்திக் கொண்டும், உதைத்துக் கொண்டும், விமானத்திற்குள் ஏற மறுத்தும், முரட்டாட்டம் பண்ணிக் கொண்டிருந்தது. தன்னால் தாங்க முடியாமல் தவித்த அந்த கர்ப்பிணியானத் தாய், கடைசியாக கைவிட்டாள். வெறுப்படைந்தவளாய் தரையில் உட்கார்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள்.

உடனடியாக ஆறு அல்லது ஏழு முன்னறிமுகமில்லாத பெண் பிரயாணிகள் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் சூழ்ந்துகொண்டனர். தின்பண்டங்களைக் கொடுத்தனர், தண்ணீர் கொடுத்தனர், அன்போடு அணைத்துக் கொண்டனர், ஒரு குழந்தைக்கான பாடலையும் பாடினர். அவர்களின் அன்பும் அரவணைப்பும் அந்தக் குழந்தை அமைதியாக அமர்ந்தது. அனைத்துப் பெண்களும் தங்கள் இருக்கைக்குத் திரும்பினர். அவர்கள் தாங்கள் என்ன செய்தோமென விவாதிக்கவில்லை. ஆனால், தங்களின் உதவி சரியான நேரத்தில் அந்த இளம்தாயை பெலப்படுத்தியது என்று தெரிந்துகொண்டனர்.

இந்தக் காட்சி சங்கீதம் 125ல் காட்டப்பட்டுள்ள அழகிய உண்மையை விளக்கிக் காட்டுகின்றது. வசனம் 2ல் 'கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்" இது சுறுசுறுப்பான எருசலேம் நகரம் எவ்வாறிருக்கும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றது. எருசலேம், ஒலிவமலை, சீயோன் மலை, மோரியா மலை என அநேக மலைகளால் சூழப்பட்ட ஒரு நகரம்.

இதே போன்று தேவன் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களின் ஆத்துமாவைப் பாதுகாக்கின்றார். 'இது முதல் என்றென்றைக்கும் பாதுகாக்கின்றார். கடினமான நாட்களிலும் 'எனக்கொத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1) என்று சங்கீதக்காரன் கூறுவது போல தேவனை நோக்கிப் பார். தேவன் உறுதியான உதவிகளோடு காத்திருக்கின்றார். நிலையான நம்பிக்கையைத் தருகின்றார். அவர் மாறாத அன்புடையவர்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நன்றியுள்ள இருதயம்

 ஹான்ஸ்லி பார்ச்மென்ட், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். டோக்கியோவில் நடைபெறும் தன்னுடைய அரையிறுதி ஒலிம்பிக் போட்டிக்கு செல்லுவதற்கு தவறான பேருந்தில் ஏறிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக விளையாட்டில் உதவிசெய்யும் டிரிஜானா ஸ்டோஜ்கோவிச்சைச் சந்தித்தார். அவர் டாக்ஸியில் செல்லுவதற்கு சிறிது பணத்தைக் கொடுத்து உதவினாள். பார்ச்மென்ட், சரியான நேரத்திற்கு அரையிறுதிக்கு சென்று, 110 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதற்கு பின்பதாக, அவர் ஸ்டோஜ்கோவிச்சைக் கண்டுபிடித்து அவளது உதவிக்கு நன்றி தெரிவித்தார். 
லூக்கா 17ஆம் அதிகாரத்தில், சமாரியவைச் சேர்ந்த குஷ்டரோகியை இயேசு சுகமாக்கியதின் நிமித்தம் அவருக்கு நன்றி சொல்லுவதற்கு ஒருவன் மாத்திரம் திரும்பி வந்த சம்பவத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம் (வச. 15-16). இயேசு ஒரு கிராமத்திற்குள் பிரவேசிக்கிறார். அங்கு பத்து குஷ்டரோகிகளை சந்திக்கிறார். அவர் அனைவரும் சுகமடையும்படிக்கு விரும்பி, அனைவரும் கிருபையையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டனர். தாங்கள் சுகமானதைக் கண்டு பத்துபேரும் ஆச்சரிப்பட்டாலும், அதில் ஒருவன் மாத்திரம் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினான். அவன் “உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்” (வச. 15-16).  
தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் ஒவ்வொரு நாளும் பல விதங்களில் அனுபவிக்கிறோம். உபத்திரவப்படும் சரியான நேரத்தில் பதில் பெறுவது என்பது, எதிர்பாராத விதமாய் அந்நியரிடத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் ஆச்சரியமான பலனாய் இருக்கும். சிலவேளைகளில் அவருடைய ஆசீர்வாதங்கள் என்பது நல்ல தட்பவெப்ப நிலை, வெளியரங்கமான சில காரியங்களாய் கூட இருக்கலாம். அந்த நன்றியுள்ள சமாரியனைப் போல் நாமும் தேவனுடைய கிருபைகளுக்காய் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.

கிருபையும் மாற்றமும்

குற்றம் அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் இருந்தது. அதைச் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் சிறையில் கழித்த அந்த மனிதன், தன்னுடைய சிந்தையையும் ஆவிக்குரிய சுகத்தையும் நாடினான். அது அவனை மனந்திரும்புதலுக்கு வழிநடத்தி, இயேசுவுடனான ஜீவியத்தை புதுப்பித்தது. இந்த நாட்களில் அவன் தன்னுடைய சக சிறைக் கைதிகளிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டான். தேவனுடைய கிருபையினாலும் அவனுடைய சாட்சியினிமித்தமும் உடன் இருந்த கைதிகளில் சிலர் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு அவரிடம் மன்னிப்பைப் பெற்றனர்.  
விசுவாச வீரனாய் கருதப்படும் மோசேயும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு குற்றத்தை செய்துவிட்டான். ஒரு எகிப்தியன் எபிரேயனை அடித்து துன்புறுத்துவதைப் பார்த்த மோசே, அவனை கொன்றுவிட்டான் (யாத்திராகமம் 2:11-12). அவன் பெரிய பாவத்தை செய்தபோதிலும், தேவன் அதை கிருபையாய் சரிகட்டினார். பின்பாக, தேவன் தன்னுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்பொருட்டு மோசேயை தெரிந்துகொண்டார் (3:10). ரோமர் 5:14இல், “மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது” என்று நாம் வாசிக்கிறோம். தொடரும் வரிகளில், எங்களுடைய கடந்தகால பாவம் எப்படியிருந்தாலும் அதை மாற்றி அவரோடு ஒப்புரவாக்குதலை கர்த்தருடைய கிருபை சாத்தியமாக்கிற்று என்று பவுல் சொல்லுகிறார் (வச. 15-16). 
நாம் செய்த தப்பிதங்களின் அடிப்படையில் தேவனுடைய மன்னிப்பை பெற்றுக்கொண்டு அவருடைய நாம மகிமைக்காய் செயல்படுவது சாத்தியமில்லாதது என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அவருடைய கிருபையினிமித்தம், நாம் மறுரூபமாக்கப்பட்டு, மற்றவர்களையும் அந்த மறுரூப அனுபவத்திற்குள் பிரவேசிக்கச் செய்யலாம்.  

ஜெபத்தினால் கிரியைசெய்தல்

என் மகனுக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை அவசியப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன். பணி ஓய்வுபெறும் தருவாயில் இருந்த அந்த மருத்துவர், இதே பிரச்சனையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதாக எங்களுக்கு உறுதியளித்தார். ஆகிலும் அவர் அறுவை சிகிச்சையை துவங்கும் முன்பு ஜெபம் செய்து, அந்த அறுவை சிகிச்சை நலமாய் முடியவேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய அந்த ஜெபத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.  
மிகவும் அனுபவசாலியான யோசபாத் ராஜா, அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜெபம் செய்கிறான். அவனுக்கு எதிராகவும் அவனுடைய ஜனத்துக்கு எதிராகவும் மூன்று தேசங்கள் படையெடுத்து வந்தது. அவனுக்கு ஏற்கனவே இருபது ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், என்ன செய்ய வேண்டும் என்று அவன் தேவனிடம் கேட்கிறான். அவன் ஜெபிக்கும்போது, “எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்” (2 நாளாகமம் 20:9) என்று ஜெபிக்கிறான். மேலும், “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (வச. 12) என்று சொல்லி ஜெபிக்கிறான்.  
தனக்கு முன்வைக்கப்பட்ட சவாலை தாழ்மையாய் அணுகிய விதம், உற்சாகத்தையும் அந்த சவாலுக்கு தேவனுடைய இடைபாட்டையும் வரவழைத்தது (வச. 15-17, 22). சிலவேளைகளில் நமக்கு எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும், நமது தேவையின்போது தேவனிடத்தில் ஜெபிப்பது என்பது நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்கிறது. அவர் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. விளைவு எப்படியிருந்தாலும் அவர் நம்முடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தாழ்மையான இடத்தில் இது நம்மை கொண்டுபோய் வைக்கிறது.